வாங்கண்ணா வணக்கங்கண்ணா....
வரவேற்பு தரும் பூ யானை!
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைநகரின் மெஹ்ரோலி பகுதியில் இருக்கும் Garden of Five Senses சென்றிருந்தோம். 28-வது Garden Tourism Festivalதில்லி அரசின் சுற்றுலாத் துறை அங்கே நடத்தியது தான் காரணம். அது பற்றிய செய்தியை படித்தவுடனே அங்கே செல்ல வேண்டும் என நினைவில் கொண்டேன். மறந்து விடுவேன் என்பதால் அலைபேசியிலும் குறித்து வைத்துக் கொண்டேன்! நண்பர் பத்மநாபன் அவர்களுக்கும் தகவல் தந்திருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அழகழகான பூக்களைக் கண்டு ரசித்தது மனதில் ஓடியதும் ஒரு காரணம்.
சிங்கத்தின் வாலை கொஞ்சம் உற்று நோக்குங்கள்! அட ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் தான் சிங்கத்தின் வால்!
மூன்று தினங்கள் மட்டும் தான் இந்த விழா – அதாவது வெள்ளியிலிருந்து ஞாயிறு வரை – வெள்ளி அன்று அலுவலகம் உண்டு, ஞாயிறு சென்றால் அதிகம் கூட்டம் இருக்கும், அதனால் சனிக்கிழமை செல்வதாகத் திட்டம். அலுவலகத்திலிருந்து அழைப்பு வராமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே, சில வீட்டு வேலைகளை முடித்து விட்டு புறப்படலாம் என முடிவு செய்தபோது பத்மநாபன் அண்ணாச்சியிடம் இருந்து அலைபேசி அழைப்பு – “அது என்ன கார்டன் சொன்னீங்க, மறந்து போச்சு!”
கூரிய பார்வையோடு கழுகு வரவேற்கிறது...
அவருக்கு கார்டன் பெயரைச் சொல்லி விட்டு, நானும் புறப்பட்டுக் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, “வீட்டுக்கு வந்துடுங்க, சேர்ந்தே போலாம்!” என்று சொல்ல அவரது இல்லத்திற்குச் சென்றேன். மதிய உணவினை அங்கே முடித்துக் கொண்டு ஆட்டோவில் Garden of Five Sensesசென்றோம். விழாவினை ஏற்பாடு செய்திருந்த தில்லி சுற்றுலாத் துறை ”சாகேத்”மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து Free Shuttle ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் ஆட்டோவில் சென்றதால் நேரே அங்கே சென்று விட்டோம்.
இயற்கை வரைந்த ஓவியமோ?
நுழைவு வாயிலிலிருந்து சற்றே தொலைவு வரை தான் ஆட்டோக்களுக்கு அனுமதி. அங்கே இறங்கிக் கொண்டு நடந்து உள்ளே நுழைந்தோம். சனிக்கிழமை என்றாலும் மக்கள் நிறையவே வந்திருந்தார்கள். Parking பகுதியில் நின்றிருக்கும் கார்களின் எண்ணிக்கை பார்த்தபோதே பிரமிப்பாக இருந்தது. ”இத்தனைக் கூட்டமா, பூக்களை நிதானமாக பார்த்து ரசிக்க முடியுமா, புகைப்படங்களை தடை இல்லாது எடுக்க முடியுமா? என்ற கேள்விகள் மனதிற்குள் ஓட நுழைவாயிலை நோக்கி நடந்தோம்.
நுழைவாயிலின் அருகே ஒரு வெளிநாட்டு ஜோடி ஒருவரை ஒருவர் தழுவியபடி கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். யார் யாருக்கு என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயம். யார் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை. எங்களுக்கும் கவலையில்லை! அது அவர்களது நாட்டு வழக்கம் என்ற நினைவுடன் நுழைவுச்சீட்டு வாங்குமிடத்திற்குச் சென்றேன். பெரியவர்களுக்கு 30 ரூபாய், 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் 10 ரூபாய். கேமராவிற்கு 50 ரூபாய், 6 ரூபாய் Service Tax – நான்கு ரூபாய் கண்டிப்பாகத் திருப்பிக் கிடைப்பதில்லை!மொத்தமாக 150 ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.
கட்டிப்போட்டு வளர்க்கப்பட்ட போன்சாய் மரம்....
நுழைவாயிலின் அருகிலேயே உள்ளே பூக்கள் கொண்டு அழகிய உருவங்களைச் செய்து வைத்திருந்தார்கள். ஆங்காங்கே சிறுவர்களுக்கான Magic Show, Puppet Show, நடனங்கள் என ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடவே உணவுக் கடைகளும் – அது இல்லாமல் எப்படி விழா நடத்த முடியும்! ஒவ்வொரு கடையிலிருந்தும் விதம் விதமான வாசனைகள் – பூக்களின் வாசனைகளை அடித்து வீழ்த்திவிடும் அளவிற்கு! – நல்ல வேளை அக்கடைகளுக்கென தனிப் பகுதி ஒதுக்கி இருந்தார்கள். இல்லையெனில் பூக்களின் வாசங்களை உணர்ந்திருக்க முடியாது!
எத்தனை எத்தனை பூக்கள் – அப்பாடி கண் கொள்ளாக் காட்சிகள். Bonsai மரங்கள், Cactus செடிகள், Tray Garden, Hanging Garden, தொட்டிகளில் பூக்கள், காய்கறிகள் என பல விதங்களில் தோட்டக்கலையை நீங்கள் இங்கே ரசிக்க முடியும். நெரம் போவது தெரியாமல் நீங்கள் பூக்களை ரசித்துக் கொண்டிருக்கலாம். பூக்களில் தான் எத்தனை எத்தனை வகைகள், வண்ணங்கள். பூக்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பது நிச்சயம் நமக்கு மன அமைதியைத் தரும்.
சாதாரண நாட்களில் இங்கே செல்வது, குறிப்பாக குழந்தைகளுடன் செல்வது நல்லதல்ல – காதல் ஜோடிகளின் தொல்லைகள் அதிகம் இருக்கும். இது போன்று Festival சமயங்களில் சென்றால் அவர்களின் எண்ணிக்கை சற்றே குறைவாக இருக்கும். எத்தனை கூட்டம் இருந்தால் என்ன, என்றபடி ஜோடி ஜோடியாக இருந்த சில காதலர்கள் தோட்ட வளாகத்தில் இருக்கும் மறைவான இடங்களை நோக்கி படையெடுத்தது! அவர்கள் வேலை அவர்களுக்கு!
நிறைய நேரம் நடந்து அங்கே பூக்களை ரசித்து விட்டு, உணவுச் சாலை பக்கம் வந்தோம். அங்கே இருந்த ஒரு உணவுப் போருளைச் சுவைத்தோம் – அது பிறிதொரு சமயத்தில் ”சாப்பிட வாங்க” பகுதியில் வரும்! சுற்றி சுற்றி வந்து கால் வலிக்க, சற்றே இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்து Coffee அருந்தினோம். முப்பது ரூபாய்க்கு MachineCoffee– அவர்கள் சொன்னால் தான் தெரிகிறது அது காபி என! அத்தனை அழகு!
இப்படியாக ஒரு சனிக்கிழமை பூக்களை ரசிப்பதில் சென்றது. பூக்கள்,பூக்கள் என நிறைய பூக்கள் – ஒவ்வொன்றையும் படம் எடுப்பதிலும் கவனம் செலுத்தினேன். அங்கே எடுத்த படங்கள் மொத்தமாக 224 – அத்தனையும் இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். இன்றும் நாளையும் சில படங்களை மட்டும் எனது வலையில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் – மற்ற படங்கள்? என்று கேட்பவர்களுக்கு பதில் நாளை!
மீண்டும் சந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.