கருங்கல் சுவர் ஆள் உயரம் இருந்தது. வாசலில் காவற்காரன் என் காரை நிறுத்தினான். என் பெயர் கேட்டான். ‘கணேஷ்’ என்றேன். உடனே கதவைத் திறந்து என்னை அனுமதித்தான். காத்திருக்கிறார்கள் எனக்காக. திறந்த கதவின் கம்பிகளுக்கு நடுவில் ஆங்கில கே. எம். எழுத்துக்கள் சமீபத்திய ப்ராஸ்ஸோவில் பளபளத்தன. ‘கிருஷ்ணா மிஷன் – உலக அமைதி’ என்று அதன் கீழ் எழுதியிருந்த்து. உள்ளே அந்தக் கட்டடத்தை அடையும் பாதை கவிதையுடன் நெளிந்தது. இருபுறமும் வரிசையாக குல்மோஹர், டாலியா, ஸெஸ்பானியா பூக்கள், கொடிகள், வர்ணங்கள், பச்சைப் புல் சதுர கஜங்கள்.
வெண்மையான கட்டடம். தந்தம் போல் மெலிதான, மஞ்சள் கலந்த, பளபளக்கும் வெண்மை. வெள்ளையடித்தவனை விசாரிக்க வேண்டும். ‘கில்லாடி வேலை வாத்யாரே!’.
போர்ட்டிகோவில் என் கறுப்பு கார் உறுத்தி இருக்கும். எனக்காக அந்த மாது காத்திருந்தாள். ‘நீங்கள் பத்து நிமிடம் லேட்’ என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையில் மறைத்தேன். பின் குறிப்பாக, ‘ஸாரி’ என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்து எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள்; தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.
இப்படித்தான் விறுவிறுப்பாக ஆரம்பித்தது ‘வாத்யாரின்’ மாயா என்ற சிறுகதை. நாகப்பட்டினம் “குமரிப் பதிப்பகம்’ வெளியிட்ட ‘மாயா’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஐந்தாம் பதிப்பு [1994] – அப்போதைய விலை ரூபாய் 19! [பத்தொன்பது ரூபாய் மட்டுமே!]. மாயா கதைச் சுருக்கத்தினைப் பார்ப்போமா?
கிருஷ்ணா மிஷன் என்பது சுவாமி கிருஷ்ணானந்த சன்மார்க்க பதா என்கிற சிக்கலான பெயரால், ‘சுவாமி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகானின் தலைமையில் நடத்தப்படும், பணம் படைத்த ஒரு இயக்கம். அவர்கள் நடத்தும் கல்லூரிகள், ஆராய்ச்சிக் கழகங்கள், அனாதை இல்லங்கள், புனர் வாழ்வு இல்லங்கள் ஆகியவை கணக்கிலடங்கா.
சுவாமி மீதும், அந்த மிஷன் மீதும் மாயா எனும் பெண் தந்த புகார் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? இதையே தான் கணேஷும் கேட்டார்.
”சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி என்னை மிஷனில் நடக்கும் ஹேலஜ்ர பூஜையில் கன்னிகைப் பெண்ணாக அழைத்தார்கள். நான் அங்கே சென்ற போது என்னை சுவாமி பலாத்காரம் செய்து விட்டார்.” [இங்கே தந்திருப்பது சுருக்கம் மட்டுமே! முழுப் புகார் படிக்க மாயா புத்தகத்தினைப் படிக்கலாமே!]
கணேஷ் இந்தப் புகாரினைப் படித்து சில விசாரணைகள் செய்து புகார் கொடுத்த மாயாவினையும், அவளது அண்ணனையும் சந்திக்கிறார். அங்கேயும் சில விவரங்கள் சேகரித்துக் கொண்டு அலுவலகத்திற்குத் திரும்பி வசந்திடம் இந்த கேஸ் பற்றிய விவரங்களைச் சொல்கிறார்.
வாத்தியாரின் கணேஷ் – வசந்த் வந்துவிட்டால் கதையில் விறுவிறுப்புக்கா பஞ்சம். காட்சிகள் விறுவிறுப்பாக மாறுகின்றன. விசாரணை, மாயா, மிஷன், கோர்ட் என்று படிப்படியாக மாறும் காட்சியில் கணேஷ்-ன் திறமையான வாதத்தினால் சுவாமி மீது சுமத்தப்பட்ட பழி பொய் என்று நிரூபிக்கப்படுகிறது. இதோடு நிறுத்தி இருந்தால் அது சாதாரணமான கதை. இதற்குப் பின் ஒரு ட்விஸ்ட் வைத்தால் தானே அது வாத்யாரின் கதையாக முடியும்.
வெற்றிக்குப் பிறகு மிஷன் சென்று சுவாமி தன் கையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொடுத்த ஒரு சிறிய தங்க கிருஷ்ணன் விக்ரஹத்தினை வாங்கிக் கொண்டு காரில் திரும்பும்போது கணேஷ் தன்னுடைய கைப்பெட்டியை மிஷன் அறையிலேயே விட்டு வந்தது தெரிகிறது. மீண்டும் மிஷனிற்குச் சென்று அதை எடுக்கும் போது...
என்ன நடந்தது என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! :) ஐம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த கதையில் வாத்தியாரின் முத்திரைகள் ஏராளம்.
சுவாரசியமான இந்த சிறுகதைத் தொகுப்பில் இன்னும் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை அஸ்திவாரம், குணம், மந்திரவாதி மற்றும் பொய்கள். உங்களுக்கு மாயா கதையின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள எத்தனை ஆவலோ அதே அளவு ஆவல் எனக்கும் ‘பொய்கள்’ கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள – ஆனால் பைண்ட் செய்து வைக்கப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின் கடைசி பக்கங்களை யாரோ ஸ்வாஹா செய்து விட்டார்கள்!
மீண்டும் வேறொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பின் குறிப்பு: பதிவிற்கான படம் நண்பர் திரு பாலஹனுமான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.